Thursday, November 29, 2012

“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துகிறதா?

அண்ணன் கிரி அவர்களின் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போவதால் அவரின் பதிவை இங்கே பகிர்கிறேன் (அனுமதியுடன்)

http://www.giriblog.com/2012/11/brahmin-cafe-controversy.html


          இது கொஞ்சம்!! தாமதமான பதிவு தான் இருந்தாலும், எனக்கு இது பற்றி கூற வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பித்திலே இருந்து இருக்கிறது. நேரமின்மை காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை. எனவே விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். இது யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என் மனதில் பட்டதை கூறுகிறேன் அவ்வளவே!
          செய்திகள் தொடர்ந்து படிப்பவர்கள் நிச்சயம் “பிராமணாள் கஃபே” என்ற பெயர் கொண்ட உணவு விடுதிக்கு திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும், அதை எதிர்த்து ஊர்வலம் எல்லாம் சென்றதும் படித்து இருப்பீர்கள். இவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் எதுக்குடா வம்பு! என்று, இந்த உணவு விடுதியின் உரிமையாளரை காலி செய்யக் கூறி விட்டார். “என்னை இங்கே இருந்து தான் காலி செய்ய முடியும் நான் வேறு இடத்தில் இதே பெயரில் உணவு விடுதி துவங்குவேன்” என்று கூறி இருக்கிறார். அவர் திரும்ப துவங்குகிறாரா அல்லது விட்டு விடுகிறாரா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்.
          திராவிட கழகத்தினர் இது போல எதிர்ப்பு தெரிவித்ததும், நான் கூட இதில் பிராமணர்கள் மட்டுமே உணவு உண்ணலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை போல என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் இந்தப் பெயர் மட்டுமே பிரச்சனை. உணவு விடுதியில் அனைவரும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்காகவே இத்தனை பிரச்சனைகள், ஆர்பாட்டங்கள்.
          எனக்கு ஒன்று புரியவில்லை (எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பலருக்கு) சாதியை முன்னிறுத்தி பிராமணர்கள் மட்டும் தான் பெயர்களை வைக்கிறார்களா? நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும்!! இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கேட்டால் வர்ணாசிரமம் பிரேமானந்தா ஆசிரமம் என்று எதோ கூறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே! மற்றவர்கள் செய்யவில்லை என்றால் இவர்களை கேள்வி கேட்பது நியாயம்.
          தருமபுரி கலவரம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆதிக்க சாதிப் பெண், தலித் பையனை திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆதிக்க சக்திகளின் நெருக்கடி காரணமாக செய்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு தலித் பகுதியில் இருந்த வீடுகளை அடித்து நொறுக்கி, எரித்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள். இதோட விட்டார்களா! தலித் மட்டுமே தேவையில்லை ஆனால் அவர்கள் நகை எல்லாம் வேண்டும் என்று அதையும் கொள்ளை அடித்து சென்று இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் சாதியை முன்னிறுத்தி மிரட்டலாகப் பேசுகிறார்கள். இதை கேட்க யாரும் இல்லை, பிராமணர்களை வசை பாடுபவர்கள் இதற்கு வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள்.
          இதே பிராமணர்கள் செய்து இருந்தால் (அவர்கள் செய்ய வாய்ப்பே இல்லை என்றாலும், சும்மா ஒரு பேச்சுக்கு) பரதநாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, தில்லானா அனைத்தும் ஆடி ஓய்ந்து இருப்பார்கள்.
          எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்! “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு தையா தக்கா என்று குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? பேருக்கு அறிக்கை விட்டது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “பிராமணாள் கஃபே” என்ற பெயர் வைத்ததற்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போல கொடுமையான நிகழ்விற்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும்!! “பிராமணாள்” என்றால் அவன் எதுவும் பேச மாட்டான்… எவ்வளவு வேண்டும் என்றாலும் அடிக்கலாம். இவர்களிடம் சென்று இது போல நடந்தால் கொமட்லையே குத்துவாங்க.
            எனக்கு இதைப் பார்த்தால் ஒரு காமெடி நினைவிற்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் “ஓமக்குச்சி நரசிம்மனை” போட்டு அடி அடி என்று அடித்து தன்னை வீரன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அது மாதிரி இருக்கிறது இவர்கள் நடந்து கொள்வது!
          பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துவார்கள், இது ஒன்றும் யாரும் அறியாத புதிய விசயமில்லை. இதை நானே நேரடியாக எத்தனையோ சம்பவங்களில் கவனித்து இருக்கிறேன், பல நேரங்களில் செம கடுப்பும் ஆகி இருக்கிறேன் ஆனால், இவர்கள் மட்டுமே இதை செய்வதில்லை. அனைத்து சமூகங்களிலும் இது நடக்கிறது. இன்று ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எத்தனை பேர் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா? ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா? இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? எங்கள் கிராமத்திலேயே இது நடக்க 1 % கூட வாய்ப்பில்லை.
          சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்காக குறிப்பாக ஒருத்தனை மட்டுமே போட்டு கும்முவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அனைவரையும் ஒரே மாதிரி எதிர்த்து நில்லுங்கள். ஒருத்தனுக்கு அடி இன்னொருத்தனுக்கு அமைதி என்ற பாகுபாடு ஏன்? இன்னொரு படத்தில் வடிவேல் சொல்லுவாரே! டேய்! என்னைய அடித்து ரவுடினு பேரு வாங்கப் பார்க்கறீங்க! என்று… அது போல எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களைப் போட்டு கும்மி விட்டு சாதிக் கொடுமையை எதிர்க்கிறார்களாம்.
          லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள்!! இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன?… அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே! இதில் என்ன ஒரு சாராரை மட்டும் தாக்குவது, அவர்களை மட்டுமே முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துவது….!!
          இது பற்றி மேலும் கூற ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது ஆனால், ஏற்கனவே பலர் இது குறித்து விவாதித்து விட்டார்கள். சும்மா கூறியதையே எத்தனை முறை மாற்றி மாற்றி வேறு முறைகளில் கூறிக்கொண்டு இருப்பது.
          தான் உயர்ந்த சாதி!!! என்பது அனைவரிடமும் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அது தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகம் தான். எப்போது வேண்டும் என்றாலும் அது தன்னை வெளிக்காட்டி விடும், அதற்கான சூழல் அமையும் போது.


.

4 comments:

  1. கிரி பிளாக்கில் ஆயிரத்து எட்டு நொட்டை நொல்லை. அங்கு என்னால் பின்னூட்டம் இட இயலவில்லை. பெயர் சொல்லு, மெயில் ஐ டி சொல்லு. வெப் பெயர் சொல்லு என கடுப்பை கிளப்பியதால்ஓடி வந்து விட்டேன். ஏன் இந்த கருமாந்திரம்??
    மாற்றி எளிமை படுதுங்கலய்யா !!



    “பிராமணாள் ஃகபே” என்ற பலகைகளை நான் சிறுவயது முதல் கும்பகோணத்தில் பல ஹோட்டல்களில் கண்டதுண்டு. அந்நாளில் அது வெறும் 'சைவ உணவு விடுதியை ' மட்டுமே குறிக்கும் ஒரு பதமே அன்றி, வெறும் பிரமணர்கள் மட்டுமே சென்று சாப்பிடும் இடமாக யாரும் அதனை கருதியது இல்லை. அங்கு எவரும் செல்லலாம். எவ்வித ஜாதீய கட்டுபாடுகளும் அங்கு இல்லாமல் தான் இருந்தது. தனிக்குவலைகள் கூட இல்லை,எல்லாமே பொதுவில்தான் இருந்தது. இது முற்றிலும் உண்மை. உண்மை. நான் பிராமணன் இல்லை. ஆனால் அப்போதெல்லாம் ஊரில் உள்ள அனைவரும் குமபகோணம் பெரியதெரு ஆர்யா பவன் சென்று மாலையில் டிபன் / காபி சாப்பிட்டதை பேசி மகிழ்வார்களே! அப்போது ஜாதி உணர்வும்,குந்தாணியும் இல்லாமல் இருந்ததே?

    இந்நாளில் காணப்படும்" உயரிய சைவ உணவகம் " என்ற சொல் தொடருக்கு இணையாக அந்நாட்களில் 60, 70 களில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் தொடரே அன்றி ஜாதீய வெறுப்புகளை அவைகள் எந்நாளும் சொன்னதில்லை. சுத்தம் சுகாதாரம், வேண்டுவோர் எல்லோரும் அந்த போர்டை பார்த்துதான் அங்கு சென்றார்கள் அதற்க்கு என்ன செய்வார்கள் இந்த புது புர்ச்சியாளர்கள்? ஜாதி பெயர்கள் இல்லாமல் இன்று உணவகங்கள் இல்லையா என்ன?
    அவைகளை நாடே அறியும் இங்கு சொல்ல தேவை இல்லை. தொட்டதெற்கெல்லாம் பார்பனர்களை வம்புக்கு இழுத்து தங்களை இன பற்றாளர்களாக காட்டி வேஷம் போடும் இந்த புது புர்ர்ச்சி கார்களை விரட்டி அடிக்கலாம். இந்த நச்சு களால் தான் சமூக ஒழுக்கமும், சம நிலையும் வீணாக அடிகப்டுகின்றன.

    ReplyDelete
  2. திரு. பிரபு அவர்களே,

    இந்த சுட்டியினை பார்க்கவும் : http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html
    பிரச்சினையின் அடுத்த பக்கம்.
    இந்த பதிவு கண்டுகொள்ளப்படாமல் போவதாக தோன்றியதால் பகிர்கிறேன். மற்றபடி உண்மை மற்றும் எதிர்வாதங்கள் தனி. இதனை இடுகையில் பின்னூட்டமாக அனுமதித்து இடுவதா அல்லது இதன் மேல் தனி பதிவாக இடுவதோ / சாரத்தினை உங்கள் கருத்தாக இடுவதோ என்பது தங்கள் முடிவு.

    http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html
    // ஆண்டாண்டு காலமாய் கல்வி மறுக்கப்பட்டு சமூகத்தின் அடித்தட்டில் உழன்று வந்த தலித் மக்களுக்கு நல்ல கல்வி கொடுத்து சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து தான் வளர வைக்க முடியுமே தவிர, ஆதிக்க சாதி என்று இவர்களால் வர்ணிக்கப்படும் சாதிக்காரர்களின் வீட்டுப் படுக்கை அறைகளில் இவர்கள் விடுதலை ஒளிந்திருக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாவிட்டால், இவர்களின் இன்றைய வெற்றி நாளைய தோல்வியில் முடிந்துவிடும். //

    பி. கு : இதே பின்னூட்டம் / சுட்டி, கருத்துடன் என்னால் வேறு சில பதிவுகளிலும் இடப்பட்டது. எனவே பல இடங்களில் பார்க்க நேர்ந்தால் பொறுத்தருள்க.

    ReplyDelete
  3. //லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள்!! இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன?… அனைத்து சாதிகளிலும்,மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே!//
    மிக நியாயமான கேள்வி.
    அவர்களின் நோக்கம் ஒரு ஜாதிக்கு எதிரான வெறுப்பு மட்டுமே.

    ReplyDelete
  4. மாணிக்கம் சந்தானம்;

    உங்களைப்போல் நானும் வேர்ட்ப்ரெஸ் தளங்கள்ல இருந்து ஓடி வந்ததுண்டு. ஆனால் நீங்க உண்மையான இ-மெயில் ஐ டி யோ, உண்மையான் உங்க தளம் பேரோ கொடுக்க வேண்டியதில்லை.

    e.g: santhanam@noreplymail.com னு என்ன வேணா கொடுக்கலாம்..உண்மையான உங்க இ-மெயில் ஐ டி யை தவிர்க்கலாம். :) அதுதான் நான் செய்றேன். :)

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...