Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, November 06, 2012

மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"

          அது ஒரு  தீபாவளிக்கு முந்தைய இரவு , அந்த அரசு பள்ளிக்கு எதிரில் இருந்த அகல்யா ரெஸ்டாரென்ட் வாசலில் வண்டியை நிறுத்தியதுமே "ஏன்டா லேட்டு" என்றான் கோபி. அவனுடன் திரு, சேகர், மணி, குமார் எல்லோரும் இருந்தார்கள்.

"என்னடா அவசரம் கை நடுங்குதோ"

"டேய் அப்புறம் பகவதி படத்துக்கு போக லேட் ஆகிடும்டா" என்று அவன் சொல்ல  நானும் சரவணனும் அவர்களோடு சேர்ந்து உள்ளே சென்றோம்.

          சின்ன சின்ன குடில்கள்  போல அறைகள், கதவுகள் இல்லாமல் துணியால் ஆனா  திரை தொங்கியது. முதல் அறையின் திரை விலகி இருந்ததால் உள்ளே யாரும் இல்லை என்று அதனுள் செல்ல முயன்ற என்னை சேகர் தடுத்தான். "நம்முது நாலாவது ரூம்மு" என்றன்,அப்போது எதிரே வந்த அந்த பெரியவரிடம் "நம்ம ரூமு ப்ரீயா இருக்கண்ணே" என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்லிச்சென்றார்.

          மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அந்த சிறிய அறை ரம்யமாக இருந்தது. அந்த வட்ட மேசையை சுற்றி  5 முதல் 8 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். ஒரு பணியாள்  வந்து என்ன வேண்டும் என கேட்டார். உணவும் மதுவகைகளும் சொல்ல கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த திரவத்தில் அப்படி என்ன இருக்கோ .. பார்த்தவுடனேயே அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. மிகச்சரியான அளவில் மது கோப்பையில் ஊற்றப்பட்டது. மது பழக்கம் இல்லாத நானும் சரவணனும் 7up உதவியுடன் அவர்களின் ஜோதியில் கலந்துகொண்டோம் .

          ஒவ்வொருவரும் ஒருமாதிரி அதைக் குடித்தார்கள்,ஒருவன் ஒரே மடக்கில் குடித்து முடித்தான்,ஒருவன் மெல்ல மெல்லக் குடித்தான், கண்களை இருக்க மூடிக்கொண்டு நாட்டுவைத்தியன் கொடுத்த கசாயத்தை குடிப்பதுபோல குடித்தான் ஒருவன். இப்படியாக குடித்தபடியே அன்று நடந்த கிரிகெட் போட்டி பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அறைக்கு வெளியே இருந்து கேட்ட பேச்சுக்குரல் அனைவரின் கவனத்தையும் திருப்பியது .
" *** பெரிய இவனாட அவ(ன் ),நா இருக்கேன்டா நீ  கவல படாத, நண்ப(ன்) காதலுக்காக நா உயிரையும் கொடுப்பேன்" - என்று ஒரு குடிகாரனின் குரல் கேட்டது .

"அது குமரேசன் தானே " -என்றான் சரவணன்

"ஆமாண்டா.."

" *** அவரு நண்பே(ன் ) காதலுக்கு  உசுர கொடுப்பாராம்ல , இவனோட தங்கச்சிய அவ(ன்) நண்பன் காதலிச்ச கட்டிக்கொடுப்பானான்னு கேளுடா " என்று சரவணன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் .

"சும்மா சரக்கடிச்சுட்டு உளர்றது " என்று சரவணன் மேலும் பேச
-
"டேய் , சரக்க தப்பு சொல்லாதடா  நீயெல்லாம் 7up குடிச்சு பேசுரதவிடவா நாங்க பேசிட்டோம் , நீயே சொல்லு பிரவு இவ்வளோ நேரமா இவன்தானே அதிகம்  பேசிட்டிருக்கன் ,அரைலிட்டர் 7up குடிச்சுட்டு என்ன பேச்சு பேசுறான் பாரு..." -என்றன் திரு .

"அரைலிட்டர் குடிச்சது போத அதிகமாகிடுச்சு போல"-என்று சரவணனை எல்லோரும் கிண்டல் செய்தார்கள். அப்போது அவசரமாக தள்ளாடியபடியே வெளியே ஓடிய சேகர் அருகே இருந்த வாஸ் பெசனில் வாந்தி எடுக்கும் சப்தம் கேட்டது . "இப்ப தெரியுதா ஏன் நமக்கு 4 வது ரூம்னு..இங்கதான் பக்கதுலையே வாஸ் பேசன் இருக்கு " என்றன் கோபி .திரு எழுந்து சேகருக்கு உதவிக்கு போனான் .இப்படி ஒரு வழியாக குடித்து/சாப்பிட்டு முடித்து வாயில் சிலர் சிகரட்டோடும் சிலர் பீடாவோடும் வெளியேறினோம்.

          கொஞ்சம் துரத்தில் இருந்த அபிராமி தியேட்டரில் வண்டியை நிறுத்தியவுடன் டோக்கன் கொடுப்பவரிடம்

"அண்ணே படம் போட்டு எவ்வளவு நேரம் ஆச்சு "

"5 நிமிசம்தான் ஆச்சு தம்பி" என்றார் அவர்

சரவணன் சிரித்தபடியே சொன்னான் "ம்கும் இன்னும் அரைமணி நேரம் கழிச்சு வந்தாலும் இதே வசனம்தா  சொல்லுவாரு இவர் ".

          டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகம் இல்லை , நான்  7 டிக்கெட் என்று சொல்லும் போது  தியேட்டர் உள்ளே இருந்து டிக்கெட் கவுண்டரை நோக்கி வந்த எங்கள் ஊர் நண்பர்கள் சிலர்

"அண்ணே உள்ள பால்கேநில உட்கார இடம் இல்லை " என்றர்கள்

"இல்லாட்டி முன்வரிசைல போய் உட்காருப்பா"

"முன்வரிசைக்கா டிக்கெட் கொடுத்திங்க ? காசு அதிகம் வாங்கிட்டு முன்னடி உட்கார சொன்ன எப்படி ? மேலே எக்ஸ்ட்ரா சேர் போட்டு கொடுங்க "

"ஆமா இவருக்கு கட்டில் போட்டு கொடுப்பாங்க " என்று அவர் கடுப்பாக பதில் சொன்னார்,அவர்களுக்குள் வாக்குவாதம் ஆனது ,அதற்குள் எங்களுக்கும் டிக்கெட் கொடுத்து இருந்தார்.

"மேலத்தான் இடம் இல்லையே ,நாங்க எங்க போக ?- என்றேன்

"முன்னாடி இடம் இருக்கு தம்பி " என்று பதில் வந்தது

"டேய் விஜய் மூஞ்சிய  மேல இருந்து பார்த்தாலே சகிக்காது , இதுல முன்வரிசைல இருந்து பார்த்த அவ்ளோதான் ,படமே பார்க்க வேணாம் டிக்கெட்ட திருப்பி கொடு" என்று என்னிடம் சொன்னான்  என் பின்னல் நின்ற சேகர் .

நான் டிக்கெட்டை திருப்பிக்கொடுத்தேன், அவர் என்னை முறைத்தார் என்னை நகர்த்திவிட்டு சரவணன் கவுண்டர் முன் நின்றன்.அவர் பதில் சொல்லாமல் காசை திருப்பிக் கொடுத்தார். "உம் முஞ்சிய பார்த்து வெளி ஊருன்னு நினைச்சுட்டான் போல" என்று என்னிடம் சொல்லியபடியே காசை சரவணன் வாங்கிக்கொள்ள எல்லோரும் வெளியேறினோம்.

"சரிடா அப்போ வீட்டுக்கு கிளம்பலாமா " என்றேன்

"ம்ம் உனக்கென்ன நீ குடிக்கல  உங்கப்பா கதவ திறந்து விடுவாரு ,எங்கபே ஓதப்பா(ன்)"

"அதுக்கு என்ன பண்ண ?"

"2 ஹவர்ஸ் இருந்துட்டு அப்புறம் போகலாம்.." என்று சொல்லியபடி பழமுதிர் சோலைக்கு அருகில் இருந்த டீக்கடை நோக்கி சென்றார்கள் .திரு-வை தவிர எல்லோருக்கும் போதை தலைகேறி இருந்தது .ஒரு எலும்பிச்சம் பழம் வாங்கி அவர்களின் வாயில் பிழிந்து விட்டான் சரவணன் ,போதை தெளியட்டும் என்று.திரு ஒரு சிகரெட்டை ஊதியபடி இருந்தான்

"நீயும்தானே குடிச்ச ,இவனுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ?" என்றேன் திரு-விடம் .

"ஒரு அளவு வேணாமா ?..குடிங்கடான்னா குளிக்கிரானுங்க..அப்புறம் இப்படித்தான்" என்றான்

          சேகர் மீண்டும் வாந்தி எடுத்தான் ,கண்கள் கலங்கி சிவப்பாகி இருந்தது .நேரம் செல்லச்செல்ல கொஞ்சம் போதை இறங்கியது ,தலையில் கைவைத்தபடி இருந்த சேகர் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா " என்றான், சரவணன் லேசாக சிரித்தான். பின்பு ஒருவழியாக அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குச்சென்றோம்.

         பலவருசம் கழித்து அதே போன்ற ஒரு தீபாவளிக்கு முந்தைய இரவு ,இந்த நினைவுகளை பேசியபடி சரவணனுடன் அதே சாலையில் வண்டியில் சென்றேன்.

"அவனுங்க இன்னும் அப்படித்தாண்டா இருக்கனுங்க..அதுவும் அந்த சேகர் ரொம்ப மோசம்டா ,சம்பாரிக்கிறத எல்லாம் குடிச்சே காலியாக்கிடுறான், பாவம்டா அவே அப்பா அம்மா ,எனக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து பயிர்ல (வெற்றிலை கொடிக்கால்) மாடா உழைச்சு படிக்கவச்சாங்க , வயசான காலத்துல பையன் காஞ்சி ஊத்துவான்னு ம்ம்ம்ம் எங்க இன்னும் அவங்க சொத்துக்கு அவங்க வேலசெஞ்ச்சாத்தான் வழி,ஒரு தங்கச்சி வேற இருக்கு என்ன பண்ண போறனோ ம்ம்ம் " என்று சொல்லியபடி வந்தான். அந்த பழமுதிர்ச் சோலை இருந்த இடம் இப்போ அரசு நடத்து "டாஸ்மாக்" இருந்தது, அருகில் இருக்கும் அந்த கடையின்  வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு "இருடா ஒரு பால் பாக்கெட் வாங்கி வாரே " என்று சொல்லிவிட்டு சென்றான் .

          கடை கொஞ்சம் நவீனமாக மாற்றப்பட்டு இருந்தது ,கடையின் முன் இருந்த பெஞ்ச்க்கு பதிலாக வட்ட மேசைகள் போடப்பட்டு அதைச் சுற்றி பிளாஸ்டிக்  சேர்கள் இருந்தன அதில் நான்கு ஐந்து பேர்  அமர்ந்து இருந்தார்கள், லேசாக மீசை  எட்டிப்பார்க்கும் வயசு அவர்களுக்கு. அதில் தலையில் கைவைத்தபடி இருந்தவன் அப்போதுதான் வாந்தி எடுத்து இருப்பான் போல ,கண்கள் சிவந்து இருந்தது. பால் பக்கெட் வாங்கிவிட்டு சரவணன் வந்ததும் நான் வண்டியை எடுத்தேன் .அப்போது தலையில் கைவைத்து இருந்த அந்த பையன் சொன்னான் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா



,,..

பின் குறிப்பு 
1.  *** - ஒரு ஆபாசமான சொல்..)
2. இது புனைவு...:)

பிரியமுடன் பிரபு..

Monday, March 12, 2012

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

எங்க அம்மா செத்து போச்சு..(சிறுகதை)

(photo:google)


செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு.

காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து என்னை அடையாளம் கண்டு கூப்பிடுகிறார் .  

கதிர் மாமா என்றதும் அவரின் சிரித்த முகமே எல்லோருக்கும் நினைவில் வரும், நான் கூட நினைப்பதுண்டு "எப்படித்தான் எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது" என்று, அதற்கு என் அம்மா சொல்வார் "அது சாமி கொடுத்த வரம்டா..." என்று

அவரை அருகில் சென்று பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவர் சிரித்தபடி இருந்தாலும் முகத்தில் அந்த இயல்பான சிரிப்பு இல்லை.


"என்ன மாமா ,உடம்பு சரியில்லையா ..முகமெல்லாம் ஒரு மாதிரியா  இருக்கு?.."

"அட அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , வயசாகிடுச்சுல்ல.." என்று சொல்லி சிரித்தவர்  
"காலைலதான் வந்தியா .. அப்பா சொன்னாரு.." -என்று பேசிக்கொண்டே சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்தார்.

சிறிய  ஓட்டில்வீடுதான்.தன் சாப்பாட்டு தூக்குபோணியை  கழுவும் இடத்தில் வைத்துவிட்டு வந்தவர் 
"காப்பி சாப்பிடுறியா மாப்ள .." என்றார் 
"இல்ல மாமா வேணாம்"
" அட  நான்  நல்லத்தான் காப்பி போடுவேன் பயப்படாத" என்று சொல்லிவிட்டு சமையல்கட்டு பக்கம் சென்றார்.
          
             ரொம்ப நாள் ஆச்சு இந்த வீட்டுக்குள் வந்து. சுற்றிலும் பார்த்தேன்  துவைக்காத துணிகள் கட்டிலின்  மேல் களைந்து கிடந்தன. ஒட்டடை அடிக்காமல் வேறு இருந்தது. சுவற்றில் மாமாவின் பையனும் பொண்ணும் பள்ளி சீருடையில் இருக்கும் படமும் அதன் அருகில் மாமா மட்டும் இருக்கும் அவரின் இளமைகால படமும் தொங்கியபடி இருந்தது. முன்பு அங்கே அவரின் திருமண புகைப்படம்  இருந்ததாக நினைவு எங்கே அது இப்போது ? மாமாவிடம்  கேட்கலாம் என நினைத்தபோது, பள்ளி விட்டு குழந்தைகள் இருவரும் விட்டுக்குள் வந்தார்கள்.
பெரியவன் "ஐ மாமா.." என்றபடி என்னை வந்து கட்டிக்கொண்டான்..சின்னவள் சோர்வாக தூக்க கலக்கத்தில் இருந்தாள்.எல்லோருக்கும் காப்பி கொண்டுவந்து  கொடுத்தார் மாமா. 


            "சிக்கிரம் ட்ரஸ் மாத்திகிட்டு டியூஷன் -க்கு புறப்படுங்க " என்று குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருந்த  மாமாவை வெளியில் யாரோ அழைக்க அவரும் சென்றுவிட்டார். நான் குழந்தைகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்..பேச்சுவாக்கில் "எங்க பாப்பா உங்க அம்மா " என்று கேட்டேன்,அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை,அப்போது பையன் சொன்னான் "ம்ம்ம் ஏங்க அம்மா செத்துப் போச்சு.." என்று.அப்போது அவன் முகம் வித்தியாசமாக இருந்தது.பின் இயல்பாக அவன் ஆடைகளை மாற்றிக்கொண்டு தயாரானான்.
         
            மாமா வந்ததும் அவர்களிடம் விடைபெற்றுkகொண்டு என் வீட்டுக்கு வந்தேன். முன்வாசலில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்த அம்மா என்னை பார்த்ததும்
"காப்பி போடட்டுமாப்பா.. " - என்றார் .
"இல்லம்மா இப்பத்தான் கதிர்மாமா வீட்டுல சாப்பிட்டேன் "
"ஓ அங்க போயிருந்தியாப்பா.. அவன பாத்தியா.." என்று கேட்டவர் என் பதிலுக்கு காத்திருக்காமல் தொடர்ந்தார் "ம்ம்ம் என்னமோ அவன் வாழ்க்கை இப்படி ஆச்சு ..அவனா ஆச பட்டுத்தான் அவள கட்டிகிட்டான் ,நல்லாத்தானே இருந்தா ..இப்படி பண்ணுவான்னு யாரு கண்டா !ரெண்டு புள்ளைய பெத்தவ, கூட வேல செய்யுற மேஸ்திரிய கூட்டிகிட்டு ஓடிட்டா ,என்ன திமிரு அவளுக்கு, அந்த ****பயலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்கு, ரெண்டுக்கும் புத்தி போயிருக்கு பாரு..ம்ம்ம் உன்கிட்ட சொல்ல வேணாமுன்னு உங்க அப்பா சொன்னாரு அதனாலத்தான் போன்ல எதுவும் சொல்லல." என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார்.  எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

**


http://atheetham.com/story/mother

(இதை அதீதம் இதழில் வெளியிட்ட ஆசிரியர்களுக்கு நன்றி)
என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..
.

Thursday, November 17, 2011

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்(ஒரு மீள் பதிவு )

.
காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....
நிச்சயதார்த்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு"- என்று

திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடு
க்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"என்று சொல்லி
என்ன பயன் முருகா????
:::::

இது ஒரு மீள் பதிவு
இதுக்கும்  படத்துக்கும் தொடர்புகள் கிடையாது..

என்றும்
பிரியமுடன் பிரபு......
.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...